Published Date: May 20, 2023
CATEGORY: CONSTITUENCY
மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் மறைந்த மூத்த வழக்கறிஞர்களின் படத்திறப்பு விழா மற்றும் உடமைகள் வைப்பறை திறப்பு விழா மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் நேற்று நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா பங்கேற்று, முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், வழக்கறிஞர்கள் ஹபிஸா மற்றும் மலைச்சாமி ஆகியோரின் படங்களை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும் போது "பல்லாயிரம் கோடி நிதி பற்றாக்குறை இருந்த நிலையில் மதுரை நீதிமன்ற கூடுதல் கட்டிடங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. எனக்கு வாய்ப்பு கிடைத்ததால் இதை செய்தேன். மீதமுள்ள நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும். என்னை பொறுத்த வரை பதவி, பொறுப்பு, ஆளும் கட்சி, எதிர்கட்சி என்பதைவிட கொள்கையும், சமத்துவமும் தான் முக்கியம். அது எப்போதும் மாறாது. நீதிமன்றம் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானது" என்றார்.
தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா பேசுகையில், "வழக்கை முழுவதும் அறிந்துகொண்டு சுருக்கமாகவும், தெளிவாகவும் வக்கீல்கள் வாதிட வேண்டும். அப்போதுதான் நீதிபதியின் கவனத்தைப் பெற்று உத்தரவு பெற முடியும். மூன்று முதல் ஐந்து நிமிடங்களில் பேசி வழக்கை நடத்தினால் சிறந்த வெற்றிகரமானவராக முடியும். இதற்கு கடினமான உழைப்பு முக்கியம்" என்றார். சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், செயலாளர் மோகன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Media: Dinakaran